1. புறப்பாடு
உயிர் மூச்சு விம்மல்கள்
உள்ளத்து வேட்கைகள். . .
பெருகிப் பெருகி-
தீராத தாகத்தில்
தீய்ந்து தணிகையில்
உன்னை-
தஞ்ச மென்றடைந்த
எண்ணப் பறவைகளை-
சிறை செய்து வதைப்பாயோ!
நெஞ்சகத்தில்-
ஊற்றுவித்த
காதல் சுனை நீரில்
காலமெல்லாம் மிதந்திடவே
கணவினிலும் நினைவினிலும்
கதறி. . .யலைகின்றேன். . .
காணலியே!.
இல்லை. . .யில்லை-
எந்தன் விழித் தோட்டத்தில்
நீங்கா இடம் பெற்று
என்னுள்ளே-
விரவி நிற்கும்
சிறு குழவி-
மழலை மொழி
கீதங்களைப் பயிலுகிறேன்.
அந்த பாவனையில்-
ஒராயிரம்
புதுமைதனைக் காணுகின்றேன்.
புதுமைதனில்-
புதுமெருகாய் சிலிர்த்து நிற்கும்
சின்னஞ் சிறு மலரின்-
செம்மை வனப்பு கண்டு
செயலற்று. . .சொக்கி விட்டேன்.
2. தேடல்கள்
கனவுத் தேரேறி
கட்டுக் கடங்காத-
குதிரை யோட்டங்களை
முடிந்த மட்டும். . .
கட்டுப்படுத்தி-
முடியாமல்
தென்றல் வந்து-
தெம்மாங்குப் பாட்டிசைக்கும்
பொற்றாமரைக் குளத்தில்
பெயர்ந்து வீழ்கையில்-
மொட்டுக்கள் அதிர்வினிலே
மொய்குழல் வண்டிசைக்கும்
ரீங்கார பாட்டிற்குச்
சுருதி சேர்த்திடும்
சிற்றலைக் கீதங்களில்
என்னைப் பறிகொடுத்தேன்.
அருவி நீரோசை-
மதகு நீர்த் தாலாட்டு
மதி மயங்கி. . .
மென் துயில் கொண்ட-
பெண் மயிலொன்று
மெல்ல முறுவலித்து-
மெய்யுருகி. . .
இணை சேர்ந்த அழகு கண்டு
இனம் புரியா-
உணர்வுகளால் உந்தப்பட்டு. . .
உனைத்தேடி.
3. நினைவின் தரிசனம்.
சித்திரப் பாவை
செந்தமிழ்ச் சொற்கோவை
வசந்த தரு-
வாடா மலர்
பனித் தென்றல்.
உன் விரலின்-
அசைவினிலே
ஓராயிரம் புதினங்கள்.
கவிதையில்-
கனவில் உணர்கிறேன்.
எண்ணச் சிதறல்களில்-
நினைவே கனவுகளாய்
நித்திரைப் பயணங்கள். . .
உருண்டு. . . உருண்டு. . .
வான்வெளிப் பட்டில்
வலம் வருகையில். . .
உந்தன்-
சுருள் கேசங்கள்
சூழ்ந்தென்னை-
பூகம்பச் சுழற்சியில்
சிறைப் படுத்தி வதைப்பதேன்! . . மு.ஆ. பீர்ஓலி.
16.12.2011